Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 ஜூலை (ஹி.ச.)
தென்காசி நகரப் பகுதியில் உள்ள மேட்டுத் தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவர் புதிதாக அந்த பகுதியில் வீடு கட்டி முடித்துள்ள நிலையில், அவரது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த நிலையில், மின் இணைப்பிற்காக இதுவரை ரூ.40 ஆயிரம் பணம் கட்டி உள்ள நிலையில், வயர்மேன் ஆறுமுகசாமி என்பவர் உங்களது வீட்டிற்கு மீட்டர் பொருத்த வேண்டும் என்றால் ரூ.2000 லஞ்சம் வேண்டும் இல்லையென்றால் மீட்டர் பொருத்த முடியாது என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அந்த வீட்டினை கட்டி வந்த ஒப்பந்ததாரரான சண்முகசுந்தரம் என்பவர் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை சண்முகசுந்தரம் மூலம் வயர்மேன் ஆறுமுகசாமியிடம் கொடுக்க வைத்த நிலையில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN