Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 22 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் கெங்கவல்லி, மண்மலை - பாலக்காடு வழியை சேர்ந்த கணேசன், 66. அரசு பள்ளி உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி, 59. அரசு மருத்துவமனை செவிலியர் ஆவார்.
இவர்கள் வீட்டுக்கு, கடந்த, 18 ஆம் தேதி ஹெல்மெட், மாஸ்க், கர்சிப் கட்டி முகத்தை மறைத்தபடி வந்த, 7 பேர் கும்பல், கணேசன், செல்வி, மகன் பிரசாத் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து, 3 மொபைல் போன்கள், 4 பவுன் நகைகள், 50,000 ரூபாயை பறித்துக்கொண்டனர்.
தொடர்ந்து, 3 பேரையும் தாக்கி, வீட்டுக்குள் தள்ளிவிட்டு வெளிப்பக்கமாக பூட்டிச்சென்றனர்.தொடர்ந்து அதே கும்பல், கூடமலை, சித்தன்பட்டிகுட்டையை சேர்ந்த மலர்விழி, 53, வீட்டுக்குள் சென்று, அவர் கழுத்தில் கத்தியை வைத்து, 10 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு அவரை தாக்கிவிட்டு தப்பினர்.
இது குறித்து தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையில், 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதில் சகோதரர்கள் உள்பட, 4 பேரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது
செந்தாரப்பட்டி, மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சஞ்சய், 21, அவரது தம்பி சந்துரு, 19, ரவி மகன் ரகுநாத், 23, திருச்சி, பொன்மலையை சேர்ந்த, குழந்தை ஏசு ராஜா மகன் அலெக்சாண்டர் சாம்சன், 31, உள்பட, 7 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இதில் சஞ்சய், சந்துரு, ரகுநாத், அலெக்சாண்டர் சாம்சன் ஆகியோரை கைது செய்து, 2.7 பவுன் நகையை மீட்டுள்ளோம். அலெக்சாண்டர்சாம்சன் மீது, கொலை உள்பட, 15 வழக்குகள் உள்ளன. தொடர்ந்து மற்றவர்களை தேடுகிறோம்.
செந்தாரப்பட்டியை சேர்ந்தவர்கள், தனியே இருக்கும் வசதியானவர்களின் வீடுகள், வயது முதிர்ந்தவர்களின் வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, நண்பர் அலெக்சாண்டர்சாம்சன் உள்ளிட்டோருடன் சேர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b