Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களிலேயே அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52-க்கு விற்பனையான சாதாரண பொன்னி அரிசி தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளதாகவும், மைசூர் பொன்னி மற்றும் ஆந்திரா பொன்னி அரிசி வகைகள் ரூ.50-லிருந்து ரூ.65 ஆகவும், சன்னரக அரிசி ரூ.64-லிருந்து ரூ.75 ஆகவும், இட்லி அரிசி ரூ.43-லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 26 கிலோ அரிசி மூட்டையின் விலையும் ரூ.250 முதல் ரூ.400 வரை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
பருவமழை குறைவு மற்றும் காவிரி பாசனப் பகுதிகளில் சாகுபடி பாதிப்பு காரணம் என கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும், கடந்த ஆண்டு மூன்று பருவங்களிலும் நெல் விளைச்சல் சிறப்பாக இருந்ததையும், நடப்பாண்டு குறுவை பருவம் இன்னும் நிறைவடையாத நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் அரிசி வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பில் வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருக்கலாம் என்றும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும், மொத்த வணிகர்களின் கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசும் விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகர்களிடம் உள்ள கையிருப்பில் 20 சதவீதத்தை அரசே கொள்முதல் செய்து, நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ