Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலம் தொடர்பான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பிய இளைஞர் வினோத் சூர்யா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வலியுறுத்திய நிலையில், அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
தனது உத்தரவில், பத்திரிகைத் துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாகத் திகழ்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். வெறுமனே அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சிப்பது மட்டுமே குற்றமாகவோ, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாகவோ கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வினோத் சூர்யாவின் சமூக வலைதள பதிவு சமூக மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாக காவல்துறை பதிவு செய்த பிரிவுகள் பொருந்தாது என்றும், இந்த வழக்கு காவல்துறையால் நேரடியாக கைது செய்யக்கூடிய வகையிலான குற்றம் அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வினோத் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ