Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கைது நடவடிக்கை சட்ட விதிகளுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
குறிப்பாக, கைது செய்வதற்கு முன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை என்றும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள கைது நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து சட்ட விதிகளும் மீறப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், கைது நடவடிக்கை சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க தமிழக காவல்துறை மற்றும் அரசுத்தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
அப்போது, வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யவும், ஜாமீன் மனுவுக்கு விரிவான பதில் அளிக்கவும் கால அவகாசம் வழங்குமாறு அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் மேலான விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை அரசியல் வட்டாரங்களிலும், சட்டத்துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த கட்ட விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ