Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீமா அகர்வால் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, ஹிமாச்சல் பிரதேச மாநில கேடராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இவர் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி ஏ.கே.விஸ்வ நாதனை திருமணம் செய்த பின்னர், தமிழக காவல்துறை யில், 1993ல் இணைந்தார்.
இவர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
அதேபோல் சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு, டி.ஜி.பி., மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டி.ஜி.பி., காவல் துறையின் தலைமையிடத்தின் கூடுதல் டி.ஜி.பி., என, பல்வேறு முக்கிய பொறுப்புகளில், பணியாற்றியிருக்கிறார்.
அதேபோல் சிபிஐ, ஊழல் தடுப்புப் பிரிவு, மாநில குற்ற ஆவணக் காப்பகத்திலும் பணியாற்றி உள்ளார்.
இறுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார்.
இவர் தகைசால் மற்றும் மெச்ச தகுந்த பணிகளுக்கு, மத்திய அரசின் ஜனாதிபதி பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவர் காவல்துறையில் பணியில் இருந்த போது, சமூகத்தில் பல்வேறு விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட்டார்.
அதேபோல் பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார்.
இந்த சூழலில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்தி வருகிறார்.
இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.
இதுபற்றி சீமா அகர்வால் கூறுகையில்,
ரிடையர் ஆன பின்னர் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக செய்து வருகிறேன்.
மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்தி வருகிறேன்.
மாணவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து இதனை செயல்படுத்துகிறேன் என்றார்.
முன்னதாக சீமா அகர்வால் ஓய்வு பெற்ற போது,
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசும் பேசும்போது,
சீமா அகர்வால் மூத்த அதிகாரி மட்டுமல்ல, அவரின் மனிதாபிமானமிக்க அணுகுமுறை அவரை உயர்ந்த இடத்தில் நிறுத்தி இருக்கிறது. எந்த பிரிவில் பணியாற்றினாலும் அதில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
ரயில்வே ஐஜியாக இருந்தபோது விபத்துகளை தடுக்க அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
காவல்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளை சேர்ந்தவர்களாலும் மதிக்கப்பட்டவர் சீமா அகர்வால் என்று புகழ்ந்து பேசியிருந்தார்.
அதேபோல் ஓய்வு நாளில் சீமா அகர்வால் பேசும்போது,
சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவு அல்லாமல் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும்போது எனக்கு தெளிவான பார்வை கிடைத்தது.
தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.
பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கு உறுதுணையாக இருக்க முடியுமா, பொதுமக்களிடம் கனிவாக இருக்க முடியுமா என்பது குறித்து நீங்களே உங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மக்களுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார்.
அப்படி பேசியவர் தான், இன்று தன்னால் முடிந்த அளவு ஓய்வு காலத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணிதம் நடத்துகிறார்.
இவரது உன்னதமான இந்த சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Hindusthan Samachar / Durai.J