Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 23 ஜூலை (ஹி.ச.)
தனக்கு எதிராக தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்த குற்றச்சாட்டுகளை உடனடியாக திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொடங்கல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து
கே.டி.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் :
குளோபரீனா நிறுவனத்துக்கும் தனக்கும், தனது குடும்பத்துக்கும், பிஆர்எஸ் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற மிக முக்கியமான விவகாரத்தில் முதல்-மந்திரி பொறுப்பற்ற முறையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்-மந்திரி பதவியில் இருப்பவர் அரசியல் ஆதாயத்துக்காக பொய்யான தகவல்களை பரப்புவது சரியல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ரேவந்த் ரெட்டி குறைந்தபட்சம் ஒருமுறையாவது முதல்-மந்திரியைப் போல செயல்பட வேண்டும் என்று கே.டி.ஆர். கடுமையாக தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறான மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் அளிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது அமைதியை குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சேற்றில் இறங்கி சண்டையிடுவது எனக்கு விருப்பமில்லை. அதனால் பல சந்தர்ப்பங்களில் நான் அமைதியாக இருக்கிறேன் என்றும் கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், தனது சட்டக் குழு மூலம் ரேவந்த் ரெட்டிக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA