Enter your Email Address to subscribe to our newsletters

ஹுச்னாபாத் , 23 ஜூலை (ஹி.ச.)
எல் நினோ தாக்கம் காரணமாக தெலங்கானா மாநிலத்தில் வறட்சி நிலை உருவாகி வருவதால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தீவன பிரச்சினைகளை சமாளிக்க அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
சித்திபேட் மாவட்டம் ஹுச்னாபாத் பகுதியில் உள்ள ஐஓசி அலுவலகத்தில் எல் நினோ தாக்கம் மற்றும் குடிநீர் நிலவரம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சித்திபேட், கரீம்நகர், ஹனுமகொண்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஹுச்னாபாத் தொகுதிக்கு உட்பட்ட 7 மண்டலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறியதாவது:-
எல் நினோ தாக்கத்தால் மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து கடுமையான வறட்சி சூழல் நிலவி வருகிறது.
வரும் ஜூன் மாதம் வரை போதிய மழை பெய்ய வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் விவசாயிகள் ஆறுதடி பயிர்களை சாகுபடி செய்யும் வகையில் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அதிகாரிகள் வழங்க வேண்டும்.
மாநிலத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தை பயன்படுத்தி அனைத்து கிராமங்களிலும் மழைநீர் சேகரிப்பு குழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“விழும் ஒவ்வொரு மழைத்துளியையும் வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நீர் வளங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அரசு திட்டங்களை வெளிப்படையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதிகாரிகள் எப்போதும் களத்தில் இருந்து பணியாற்றவும் அமைச்சர் பொன்னம் பிரபாகர் உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA