Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 23 ஜூலை (ஹி.ச.)
காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக இயங்கி வரும் பிரபல பட்டு சேலை கடை ஒன்றின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அந்த கணக்கில் குறைந்த விலையில் பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆன்லைனில் முன்பணம் செலுத்தினால் இலவச டெலிவரி செய்யப்படும் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனை நம்பிய பெண் ஒருவர் பட்டு சேலை வாங்குவதற்காக ரூபாய் ஏழாயிரத்தை அந்த கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பிய பிறகு சேலை வராததாலும், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பை துண்டித்ததாலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலி கணக்கை இயக்கி மோசடி செய்தது 35 வயதான கார்த்திக் என்பவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை நேற்று கைது செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன் மற்றும் வங்கி கணக்குகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல கடைகளின் பெயரில் வரும் இது போன்ற போலியான சமூக வலைதள விளம்பரங்களை நம்பி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும், சந்தேகத்திற்கிடமான கணக்குகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b