Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதில் மொத்தமாக 70,485 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,760 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29,725 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் போலி விண்ணப்பங்கள், தவறான சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சரிபார்ப்புக்குப் பிறகு தகுதியற்ற விண்ணப்பங்கள் நீக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களின் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே தரவரிசைப் பட்டியலைத் தரவிறக்கம் செய்ய முடியும்.
தரவரிசைப் பட்டியல் வெளியானதும், ஆன்லைன் வழியாகக் கல்லூரிகளைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கப்படும்.
பின்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அடங்கிய கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும்.
இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்களை வழங்கியுள்ளதால், மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b