பவன் கல்யாண் தலைமையை வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்- ஜனசேனா தொண்டர்களுக்கு நாதெண்ட்ல மனோகர் வேண்டுகோள்
விஜயவாடா , 24 ஜூலை (ஹி.ச.) வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வகையில் ஜனசேனா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவர் நாதெண்ட்ல மனோகர் கேட்டுக்கொண்டார். கட்சிக்க
A


விஜயவாடா , 24 ஜூலை (ஹி.ச.)

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வகையில் ஜனசேனா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுத் தலைவர் நாதெண்ட்ல மனோகர் கேட்டுக்கொண்டார்.

கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் குழு அரசியல்களுக்கு இடம் அளிக்காமல், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தனது அறிக்கையில் அவர்

கூறியதாவது:-

நாம் அனைவரும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் தலைமையை வலுப்படுத்துவதற்காகவே செயல்படுகிறோம். தனிப்பட்ட அணிகள், பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

கடந்த மாநகராட்சி தேர்தல்களில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் ஜனசேனா கட்சி உறுதியுடன் களத்தில் நின்றதாகவும், விஜயவாடாவில் 39 வார்டுகளில் போட்டியிட்டு சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றது கட்சியின் களப்பணிக்கு கிடைத்த ஆதரவை காட்டுகிறது என்றும் நாதெண்ட்ல மனோகர் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் கட்சி சின்னத்தை மட்டும் நம்பாமல், மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். வெறும் வாகனங்களில் செல்வது, பெரிய அளவில் பேனர்கள் மற்றும் விளம்பரங்கள் செய்வது மட்டும் தேர்தல் வெற்றிக்கு உதவாது.

மக்களின் அன்றாட பிரச்சினைகளில் பங்கேற்று தீர்வு காண முயற்சிப்பவர்களுக்கே மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனசேனா தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், அனைத்து பதவிகளையும் ஒரே நேரத்தில் எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் நாதெண்ட்ல மனோகர் குறிப்பிட்டார்.

கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, படிப்படியாக கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சமூக வலைதளங்களில் ஜனசேனா கட்சி மற்றும் பவன் கல்யாணுக்கு எதிராக பரப்பப்படும் தவறான தகவல்களை தொண்டர்கள் உண்மைகளின் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றும், கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA