காவல் மரணமடைந்த அருணாச்சலம் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு - உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடியில் காவல் துறையினரின் விசாரணையில் இருந்தபோது உயிரிழந்ததாக கூறப்படும் அருணாச்சலத்தின் மரணம் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் நீதி வ
காவல் மரணமடைந்த அருணாச்சலம் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு - உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடியில் காவல் துறையினரின் விசாரணையில் இருந்தபோது உயிரிழந்ததாக கூறப்படும் அருணாச்சலத்தின் மரணம் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் நீதி விசாரணை கோரி வலியுறுத்தி வரும் நிலையில், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்த மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில், இன்று காலை 7.10 மணியளவில் அருணாசலத்தின் உடலுக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது.

3 மாவட்ட சிறப்பு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை நடைபெற்ற போது மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அருணாச்சலத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் கண்ணீருடன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர்.

இந்த காவல் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான முழு காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b