Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பில் முக்கிய மாற்றமாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழ்நாட்டின் நில நிர்வாக ஆணையராக (Commissioner of Land Administration) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ராஜேஷ் லக்கானி, அண்மைக் காலமாக மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
தற்போது அவர் மத்திய அரசுப் பணியில் இருந்து தமிழ்நாடு மாநில அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, மாநிலத்தின் நில நிர்வாகத் துறையின் உயரிய பொறுப்பான நில நிர்வாக ஆணையர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நில நிர்வாக ஆணையர் பதவி, தமிழ்நாட்டின் வருவாய்த் துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அரசின் நிலங்கள் பாதுகாப்பு, நிலப் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிப்பு, நில ஒதுக்கீடு, ஆக்கிரமிப்புகள் தொடர்பான நடவடிக்கைகள், இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு, மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை இந்தத் துறை மேற்கொள்கிறது.
நிர்வாக அனுபவம் மிக்க அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும், அரசின் முக்கியத் துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
மத்திய அரசிலும் கல்வித் துறையில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
அவரது நியமனம் மூலம் நில நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையின் செயல்பாடுகள் மேலும் திறம்பட மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நியமனம், தமிழ்நாடு அரசின் சமீபத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ