Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.)
லடாக் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து 26 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி சஃப்தார்ஜூங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனம் வாங்சுக், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி குருகிராமில் உள்ள மெடாண்டா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங் மற்றும் லே–லடாக் உச்ச அமைப்பின் மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் உண்ணாவிரதத்தை முடித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள சோனம் வாங்சுக்,
பல்வேறு நிபந்தனைகள் குறித்து நீண்ட நேர பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், நாட்டில் வன்முறை ஏற்படக்கூடிய சூழலைத் தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தை முடிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து விரைவில் தனி காணொளி மூலம் விரிவாக விளக்குவேன் என்றும், எந்த இடத்திலும் வன்முறைக்கு இடமளிக்காமல் அமைதியைப் பேணுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P