Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
கூட்டுறவுத் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைதீர் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, விரைவாக தீர்வு வழங்கும் நோக்கில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய நடைமுறையின்படி, வட்டார (Block) அளவில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு அதே நிலையிலேயே தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட்டார அளவில் தீர்வு காண முடியாத மனுக்கள், துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு, மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று அவற்றை பரிசீலித்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த நிலையிலும் தீர்வு கிடைக்காத மனுக்கள், மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று அவற்றுக்கு இறுதி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம், குறைதீர் மனுக்கள் நீண்டகாலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்த்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு காலதாமதமின்றி தீர்வு வழங்குவதை கூட்டுறவுத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், பெறப்படும் அனைத்து குறைதீர் மனுக்களும் மேல்நிலை அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றின் முன்னேற்ற விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் புதிய வழிகாட்டுதல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ