நடு இரவில் பைக் திருடிய ரோந்து போலீசார் - சிசிடிவி ஆதாரத்தால் அம்பலம்
சேலம், 25 ஜூலை (ஹி.ச.) சேலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை. தனியார் நிறுவன ஊழியரான இவர், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வாகனம் காணா
திருட்டு


சேலம், 25 ஜூலை (ஹி.ச.)

சேலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரை. தனியார் நிறுவன ஊழியரான இவர், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், காவல்துறையினர் தரப்பில் உரிய பதிலோ நடவடிக்கையோ எடுக்கப்படாமல் அலட்சியம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் பதிலால் சந்தேகமடைந்த துரை, தனது வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது வெளியான காட்சிகள் அவரை உரைய வைத்தன.

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்து வந்த இரண்டு காவலர்கள், துரையின் பைக்கை எடுத்துச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

ஒரு காவலர் பைக்கை தள்ளிக்கொண்டு போக, மற்றொரு காவலர் அவருக்கு உதவியாகச் சென்றுள்ளார்.

போலீசாரே பைக்கை தூக்கிச் சென்ற ஆதாரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துரை, உடனடியாக சிசிடிவி காட்சிகளுடன் மீண்டும் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று கேள்விகளை எழுப்பினார்.

கையுமகவுமாக ஆதாரத்துடன் சிக்கியதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் திகைத்துப் போயினர். பின்னர் நீண்ட நேரம் கழித்து, வேறு எங்கோ மறைத்து வைத்திருந்த வாகனத்தைக் கொண்டுவந்து துரையிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதோடு, வாகனப் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படிச் செய்தோம் என மழுப்பலான விளக்கமளித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

பொதுமக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே, நள்ளிரவில் திருட்டுத் தனமாக வாகனத்தை எடுத்துச் சென்றதும், சிசிடிவியில் சிக்கியதும் விழிப்புணர்வு என நாடகமாடி சமாளிக்க முயன்றதும் சேலம் பகுதியில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam