Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 25 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு விவகாரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி இருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.
தெலங்கானா பா.ஜனதா அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு இரவு பகலாக செயல்பட்டு வருகிறது. நீட் விவகாரம் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நம்பிக்கையுடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினையாகும். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவலை அடைந்தார்.
நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேராசிரியர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். மாணவர்களின் கல்வி ஆண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக குறுகிய காலத்திலேயே மறுதேர்வு நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டன.
போராட்டங்களில் வன்முறைடெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய பண்டி சஞ்சய், மாணவர்கள் என்ற போர்வையில் சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் பெண் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 118 போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே போலீசார் தடியடி நடத்தியதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்டெல்லியில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் பண்டி சஞ்சய் தெரிவித்தார்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவில் தவறான பிரசாரங்களை பரப்பியதாகக் கூறப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த 480 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA