Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 26 ஜூலை (ஹி.ச.)
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நெறிப்பொறுப்பு ஏற்று பதவி விலகியதாக கூறியுள்ள ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, அதே பொறுப்புணர்வை ஆந்திர அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெறிப்பொறுப்பை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகியிருப்பது, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொறுப்புணர்வை காட்டுகிறது.
இதே அணுகுமுறையை ஆந்திரப் பிரதேசத்திலும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆந்திராவில் நடைபெற்ற டிஎஸ்சி (ஆசிரியர் தேர்வு) தேர்வு தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சுமார் 3.5 லட்சம் ஆசிரியர் தேர்வு விண்ணப்பதாரர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு நெறிப்பொறுப்பு ஏற்று மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பதவி விலகுவாரா? என்று ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், என்டிஏ அரசு தேசிய அளவில் வலியுறுத்தும் தரநிலைகள், மதிப்புகள் மற்றும் பொறுப்புணர்வை ஆந்திர மாநிலத்திலும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு அரசின் கொள்கைகளை பின்பற்றுவாரா அல்லது தனது மகனின் பதவியை பாதுகாப்பாரா என்றும் ஜெகன் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு ஜெகன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA