Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 26 ஜூலை (ஹி.ச.)
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டப் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றன.
இந்தத் திட்டத்துக்காக வீடுகளை காலி செய்யும் மக்களுக்கு 12 மாதங்களுக்கான வாடகை முன்பணமாகவும், ஒரு மாத வாடகைக்கான தரகு தொகையும், இடமாற்றச் செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுவதுடன், ஆண்டுதோறும் வாடகைத் தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் தாமாக முன்வந்து வாடகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தங்களது வீடுகளை காலி செய்து வருவதாக அதானி நவபாரத் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 2 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட வாடகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன், 1,023 குடும்பங்கள் தங்களது வீடுகளை காலி செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பால் திட்டப் பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை 570 வீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA