Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஜூலை (ஹி.ச.)
கோவை பெரியகடை வீதியில் உள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, கோயில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15.07.2026 அன்று நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது, ஒரு உண்டியலை திட்டமிட்டு திருடியதாக 4 கோயில் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை தடுக்கத் தவறியதோடு, முறைகேட்டை கண்டறியாமல் இருந்ததாக 2 சரக ஆய்வாளர்கள், 1 செயல் அலுவலர் மற்றும் 1 உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள்:
திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்கள்:
பாலசுப்ரமணியன் – சீட்டு விற்பனையாளர்
சரவணன் – அலுவலக உதவியாளர்
பிரதீப்குமார் – திருவலகு பணியாளர்
கிருஷ்ணராஜ் – பூசாரி
நடவடிக்கை எடுக்கப்பட்ட அதிகாரிகள்:
ராம்குமார் – சரக ஆய்வாளர்
உதயகுமார் – சரக ஆய்வாளர்
குமார் – செயல் அலுவலர்
உஷா நந்தினி – உதவி ஆணையர்
இந்த 8 பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ