Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 26 ஜூலை (ஹி.ச)
உலகப் புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சைவ சமயத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் இது நெருப்பைக் குறிக்கும் அக்னி ஸ்தலமாகும்.
பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கால்நடையாக வலம் வந்து வழிபடுகின்றனர்.
அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.
இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பொது வரிசையிலும், ரூ.50 கட்டண வரிசையிலும் நீண்ட தூரம் காத்திருக்கின்றனர்.
பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலையைச் சுற்றி தனித்தனியாக கிரிவலம் மேற்கொண்டு தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b