Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 26 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயன்ஸ் (HITS) ஆடை வடிவமைப்புத் துறை, தனது ஆண்டறிக்கை ஃபேஷன் ஷோ ராஸில் டாஸில் 12.0 நிகழ்வை தன் பாடூர் வளாகத்தில் நடத்தியது.
எம்.ஜி.ஆர் அரங்கில் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த விழாவில், 300-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஏழு முக்கிய மேடைப் பிரிவுகளில் காட்சிப்படுத்தினர்.
அத்துடன் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னணி வடிவமைப்பாளர்களின் சிறப்பு நடைபயணங்களும் இடம்பெற்றன.
இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் விஷியோநெக்ஸ்ட்
(VisioNxt ) பிரிவின் தலைவரான டாக்டர் கௌஸ்தவ் சென்குப்தா முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார்.
அவர் இளம் வடிவமைப்பாளர்களைப் பாராட்டிப் பேசுகையில்,
மாணவர்கள் எடுத்துக்கொண்ட புதிய கருத்துக்களையும் படைப்புசார் முயற்சிகளையும் காண்பது மிகவும் புத்துணர்ச்சியளிக்கிறது.
தனித்துவமான வடிவங்கள், இதுவரை கண்டிராத வண்ணக் கலவைகள் மற்றும் புதிய பாணிகளை உருவாக்குவதில் மாணவர்கள் அசாத்திய உழைப்பைச் செலுத்தியுள்ளனர் என்றார்.
கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட இந்தியன் டெரெய்ன் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியான ஷெஹ்னாஸ் ஷெரிஃப்,
தொழில்துறையின் ஒட்டுமொத்த பார்வையைப் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வெறும் ஆடை வடிவமைப்புடன் நிறுத்திவிடாமல், சந்தைப் போக்குகள், மூலப்பொருள் கொள்முதல், வணிகப் பெருக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் விற்பனை விருப்பங்கள் ஆகியவற்றில் நேரடி அனுபவத்தைப் பெறுமாறு அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிறுவனத்தின் இலக்கு குறித்துப் பேசிய ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் .அசோக் ஜார்ஜ் வர்கீஸ்,
எங்கள் ஆடை வடிவமைப்புத் துறையில் சேரும் மாணவர்கள் இயல்பான படைப்பாற்றலுடனும் ஆர்வத்துடனும் வருகிறார்கள்.
அவர்கள் ஆடை வடிவமைப்புத் தியரியில் மட்டுமன்றி, புதுமை மற்றும் ஆடைத் தொழில்முனைவிலும் சிறந்து விளங்கி, தொழில்துறைக்கு முழுமையாகத் தயார்பட்ட பட்டதாரிகளாக வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில் எங்களது பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆடை வடிவமைப்புத் துறையின் தலைவர் டாக்டர் அனிஷ் ஷர்மிளா எம்,
தங்களது வடிவமைப்புப் பணிகளில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும், இத்துறை தனது கே.சி.ஜி பேஷன் பேங்க் என்ற முயற்சி மூலம் ஆடைப் பயன்பாட்டுக் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடைகளை மறுசுழற்சி செய்து புதிய பாணி ஆடைகளாக மாற்றி, தொண்டு நிறுவனங்கள் மூலம் வசதியற்ற மக்களுக்கு வழங்கி வருகிறது,என்றார்.
இதனைத் தொடர்ந்து,இரு பட்டப்படிப்புப் பிரிவுகளிலும் சிறந்த மாணவர் படைப்புகளைக் கெளரவிக்கும் விருது வழங்கும் விழாவுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA