கேரள லாட்டரி தமிழகத்துக்கு கடத்தப்படுகிறதா? -வாளையார் எல்லையில் தீவிர வாகன சோதனை
பாலக்காடு , 26 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் வைத்திருப்பதற்கு தடை அமலில் உள்ளதால், கேரள லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கேரள–தமிழக எல்லையான வாளையார் சோ
A


பாலக்காடு , 26 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் வைத்திருப்பதற்கு தடை அமலில் உள்ளதால், கேரள லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கேரள–தமிழக எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் வாளையார் வழியாக கேரளாவுக்கு சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்களில் சிலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், சிலர் விற்பனை நோக்கத்துடனும் லாட்டரி சீட்டுகளை வாங்குவதாக கூறப்படுகிறது.

புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்குள் செல்லும் வாகனங்களில் கேரள லாட்டரி சீட்டுகள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும், கேரளாவுக்குள் வரும் வாகனங்களில் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறதா என்பதையும் போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்த 4 பேர் கேரள லாட்டரி சீட்டுகளுடன் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை வைத்திருப்பது அல்லது விற்பனைக்காக எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என்றும், லாட்டரி சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்றும், அதிக அளவில் லாட்டரி சீட்டுகளுடன் பிடிபடுவோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும், வாளையார் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைகள் வரும் நாட்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA