Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஜூலை (ஹி.ச.)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலில் மாநில மொழி வாழ்த்தும், பின்னர் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு என்றும், அந்த வரிசையை மாற்றுவது மாநிலத்தின் உரிமை மற்றும் பாரம்பரியத்தை மீறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது வேதனையளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதே இந்திய இறையாண்மையின் பன்முகத் தன்மையையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கும் வழி என்று தெரிவித்துள்ளார்.
வெற்றித்தமிழர் பேரவை சார்பில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள வைரமுத்து, கழற்றப்பட்ட தமிழ்த்தாயின் மகுடம் மீண்டும் சிரசில் சேரட்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P