Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 27 ஜூலை (ஹி.ச.)
அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதி மற்றும் அதன் துணை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், மேல் அசாம் பகுதிகளில் வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளதால் நிவாரணப் பணிகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை மறுவாழ்வு முகாம்களில் இருந்து மீட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்வதிலும் அரசு நிர்வாகம் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடும் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 68 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் அறிக்கையிடல் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு (DRIMS) இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்கவும் மாநில அமைச்சர்கள் குழு அந்த பகுதிகளுக்கு நேரடியாக செல்லும் என்று அறிவித்துள்ளார்.
குறிப்பாக, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர மறுவாழ்வு ஏற்பாடுகள் விரைவில் செய்து தரப்படும் என்றும் மாநில அரசு உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b