Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 27 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகப் பகுதியில், தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, மான், காட்டுப்பன்றி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள், அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் அருகே வேடர்காலனி பகுதியில் குமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை பாக்யராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை அந்த தோட்டத்திற்குள் நுழைந்த போது, தோட்டத்தைச் சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்வேலி அமைக்கப்பட்டதா, அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam