நாய் கடித்த ஆத்திரத்தில் பெட்டிக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு
நெல்லை, 27 ஜூலை (ஹி.ச.) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கத்துரை (55). இவர் தனது வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது வளர்ப்பு நாயை வீட்டில் கட்டிப் போடாமல் தெருவில் சுற்றித் திரிய
Palayankottai Police Station


நெல்லை, 27 ஜூலை (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கத்துரை (55).

இவர் தனது வீட்டிலேயே பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது வளர்ப்பு நாயை வீட்டில் கட்டிப் போடாமல் தெருவில் சுற்றித் திரிய விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த வழியாக நடந்து சென்ற ஒருவரை அந்த நாய் கடித்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்தோணி தங்கத்துரையின் பெட்டிக்கடை மற்றும் வீட்டின் மீது கல்லைத் தூக்கி எறிந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர், மண்ணெண்ணெயை பாட்டிலில் நிரப்பி பெட்டிக்கடை மற்றும் வீட்டின் மீது குண்டாக வீசிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் விசாரணையில் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தோணி தங்கத்துரை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN