Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நடத்தப்படும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கோயில்களில் திருமேனிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் புனித நிகழ்வானது, அந்த கோயில்களின் ஆகம விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முறையாக நடத்துவதற்கான மருந்து சாற்றுதல் சான்றிதழ் நிகழ்வு தொடர்பாகவும் தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெரிய திருக்கோயில்களைப் பொறுத்தவரை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வை நடத்துவதற்கு முன்பாக அறநிலையத்துறை ஆணையரின் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறிய கோயில்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்களின் ஒப்புதலைப் பெற்று, சரக ஆய்வாளர் முன்னிலையில் தான் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு மருந்து சாற்றுதல் சான்றிதழ் நிகழ்ச்சியையும் தவறாமல் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b