Enter your Email Address to subscribe to our newsletters

சிவகாசி, 27 ஜூலை (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் தகரக் கொட்டகை அமைத்து உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பட்டாசு தயாரிப்பின் போது திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தகரக் கொட்டகை முற்றிலும் சிதறி, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தீக்கிரையாகினர்.
இந்த விபத்தில் ராம்பிரகாஷ் (32), இன்னாசிமுத்து (42), ஐய்யப்பராஜா (38), பாண்டித்துரை (35) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 90 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்த ராமச்சந்திரன் (40) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது எப்படி, இதற்கு யார் பொறுப்பு, பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P