Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 27 ஜூலை (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடியில் கார், பயணிகள் வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒருமுறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பழைய கணக்கீட்டு முறையின்படி இந்த புதிய கட்டண உயர்வு படிப்படியாக அமலுக்கு வந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒரு முறை சென்று வருவதற்கான இருவழி பயணக் கட்டணம் 160 ரூபாயில் இருந்து 165 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், தினசரி பயணம் மேற்கொள்ளும் வாகனங்களுக்கு வழங்கப்படும் 50 முறை பயணத்திற்கான மாதாந்திர கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 5725 ரூபாயாக இருந்த இந்தக் கட்டணம் தற்போது 5945 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால், அவ்வழியாக தினந்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் நிலையில், சுங்கக் கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b