Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 27 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பெரிய அளவிலான போட்டி வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மகளிர் டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரீமியர் லீக்) டி20 கிரிக்கெட் தொடரை தொடங்குவது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதன் தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்துள்ளார்.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜிடம், மகளிர் டி.என்.பி.எல். தொடர் நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் ஏராளமான திறமையான மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இருப்பதாகவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும், உயர்மட்ட போட்டி அனுபவத்தை வழங்குவதற்கும் மகளிர் டி.என்.பி.எல். தொடரை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தமிழக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மகளிர் டி.என்.பி.எல். தொடர் எப்போது தொடங்கப்படும், எத்தனை அணிகள் பங்கேற்கும், போட்டி வடிவம் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA