அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற வருண ஜெபம் மற்றும் வருண யாகம்
திருவண்ணாமலை, 27 ஜூலை (ஹி.ச.) தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து பாதிக்கப்படும் மாவட்டத்தில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது, குறிப்பாக திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்மீக பக்தர்களின
Tiruvannamalai Marakka Malai


திருவண்ணாமலை, 27 ஜூலை (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து பாதிக்கப்படும் மாவட்டத்தில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது, குறிப்பாக திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்மீக பக்தர்களின் வருகையால் வீடுகள் அனைத்தும் லாட்ஜ்களாகவும், ஹோம் ஸ்டேகளாகவும் மாறி உள்ளதால் அதிக அளவு வரும் பக்தர்களின் வருகையால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதுடன் நிலத்தடி நீர் என்பது முற்றிலும் குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காகவும், நிலத்தடி நீர் உயரவும், மழை வேண்டியும் வருண ஜெபம் மற்றும் வருண யாகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, 108 சிவாச்சாரியார்கள் பிரம்ம தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி 3 மணி நேரத்துக்கு மேலாக

பல்வேறு மந்திரங்களை ஜெபித்தபடி வருண ஜெபம் மேற்கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல் பிரம்ம தீர்த்த குளக்கரையில் அமைந்துள்ள 4 கால் மண்டபத்தில் சிவாச்சாரியார் மற்றும் வேத விர்ப்பனர்கள் யாக குண்டம் அமைத்து 10008 முறை மந்திரங்களை ஜெபித்தபடி மகா யாகம் நடைபெற்று பின்னர் மகா யாகத்தில் பூர்ணாஹீதி விமர்சையாக நடைபெற்றது, தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு உச்சி கால வேலையில் கலச அபிஷேகம் செய்யப்பட்டது.

முன்னதாக பிரம்ம தீர்த்த குளக்கரையில் அமைந்துள்ள 4 கால் மண்டபத்தில் மாணவிகளின் இசை மற்றும் நாட்டியக் கச்சேரிகள் நடைபெற்றது.

Hindusthan Samachar / ANANDHAN