Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் இருந்து எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலத்திற்குள் நிலவும் கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாட்டை போக்கவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான எம்-சாண்ட், ஜல்லி மற்றும் பிற கனிமங்கள் பெருமளவில் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், இதன் காரணமாக உள்ளூரில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனை கருத்தில் கொண்டு, அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு எம்-சாண்ட் உள்ளிட்ட எந்தவிதமான கனிம வளங்களையும் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது கொண்டு செல்லவோ கூடாது.
இந்த தடை உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மீது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெரும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், எல்லைப் பகுதிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b