Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் சமீபத்திய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே! மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை கார் பயணம் மேற்கொண்டீர்களே.
ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகத் தெளிவாக பதிலளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி நீர் உரிமையை வெளிப்படையாகப் பறிக்கும் வகையில் மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை எதிர்த்து உங்கள் குரலை உயர்த்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, அல்லது வழக்கம்போல் காங்கிரஸ் மீது பழி சுமத்திவிட்டு, பாஜகவுடன் கூட்டணியைத் தொடரப் போகிறீர்களா? என்றும் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில் விமர்சனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் பதிலைத் தொடர்ந்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் தனது பதிவின் மூலம் மாணிக்கம் தாகூர் முன்வைத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ