Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 28 ஜூலை (ஹி.ச.)
பி.எம்.ஶ்ரீ (PM SHRI) பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ள விவரத்தை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் பி.எம்.ஶ்ரீ பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் இந்தியல்லாத மொழிகளில் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பதிலின்படி, நாடு முழுவதும் 14,500 பள்ளிகளை பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 13,092 பள்ளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது ஆசிரியர்கள் 1,994 பேரும், மாநில மொழிகளுக்காக 9,152 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய சு.வெங்கடேசன், மிகவும் குறைவானோர் பேசும் சமஸ்கிருதத்திற்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, மும்மொழிக் கொள்கை மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்காக அல்ல என்பதை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பி.எம்.ஶ்ரீ பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சில மாநிலங்களில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாய்மொழி வளர்ச்சியை முன்னிறுத்துவதாக மத்திய அரசு கூறும் புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையின் உண்மை நிலையை இந்தப் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக சு.வெங்கடேசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P