அக்னி வீரர்களுக்கு ஓராண்டு டிப்ளமோ படிப்பு - அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு
சென்னை, 28 ஜூலை (ஹி.ச.) நாட்டின் பாதுகாப்புப் பணியில் இருந்து திரும்பும் அக்னி வீரர்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கும் வகையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் ராணுவ சேவையை நிறைவு செய்யும் வீரர்களுக்காக பிரத்யேகமாக ஓராண்டு டி
அக்னி வீரர்களுக்கு ஓராண்டு டிப்ளமோ படிப்பு  - அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு


சென்னை, 28 ஜூலை (ஹி.ச.)

நாட்டின் பாதுகாப்புப் பணியில் இருந்து திரும்பும் அக்னி வீரர்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கும் வகையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் ராணுவ சேவையை நிறைவு செய்யும் வீரர்களுக்காக பிரத்யேகமாக ஓராண்டு டிப்ளமோ படிப்பை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த சிறப்பு டிப்ளமோ படிப்பு, ராணுவத்தில் பெற்ற ஒழுக்கம், தொழில்நுட்ப அறிவு மற்றும் அனுபவத்துடன், குடிமை வாழ்வுக்கு தேவையான தொழில்சார் திறன்களையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பணி நிறைவுக்குப் பிறகு அக்னி வீரர்கள் தனியார் துறைகளிலும், அரசு சார்ந்த தொழில்களிலும், சுயதொழில் துறையிலும் எளிதில் வேலைவாய்ப்பை பெற முடியும். மேலும் உயர்கல்வியை தொடர விரும்புவோருக்கும் இந்த டிப்ளமோ சான்றிதழ் பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி வீரர்களின் மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, நாட்டுக்காக சேவையாற்றிய இளைஞர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் நன்றிக்கடனாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்புக்கான பாடத்திட்டம், சேர்க்கை விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b