Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 28 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆந்திராவைச் சேர்ந்த உடல் பருமனான இளைஞர் ஒருவர் கோயிலின் குகை போன்ற குறுகிய வாயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிரிவலம் வந்த பக்தர் கோயிலுக்குள் ஒருக்களித்து படுத்தபடி நுழைய முயன்றபோது இடுக்கான பாதையில் சிக்கிக் கொண்டதாகவும், வெளியே வர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் பணியில் இருந்து, கோயிலுக்குள் செல்லும் பக்தர்களைக் கண்காணித்து பாதுகாப்பாக வழிநடத்துவார்கள்.
மேலும், பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதால், அன்றைய தினம் இடுக்கு பிள்ளையார் கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும், பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b