Enter your Email Address to subscribe to our newsletters

மாட்ரிட், 28 ஜூலை (ஹி.ச.)
ஸ்பெயினில் கடந்த பல நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் கொடூர காட்டுத் தீயால்
மத்திய ஸ்பெயினில் மாட்ரிட், ஆவிலா மற்றும் டோலிடோ மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இதுவரை சுமார் 77,000 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
இது கிட்டத்தட்ட 190,000 ஏக்கர் நிலத்திற்கு சமம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயின் சுற்றளவு மட்டும் சுமார் 280 கிலோ மீட்டர் வரை பரவியுள்ளதாக மாநில அரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து எரியும் இந்த தீயின் வெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் பைரோகுமுலஸ் எனப்படும் தீ மேகங்கள் உருவாகி வருகின்றன.
இந்த மேகங்கள் இடி, மின்னலை உருவாக்கி மீண்டும் புதிய இடங்களில் தீப்பற்ற காரணமாக அமைவதோடு, காற்றின் திசையை மாற்றி தீயணைப்பு பணிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனையே வல்லுநர்கள் தீயால் உருவான புதிய வானிலை மாற்றம் என எச்சரிக்கின்றனர்.
இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கடும் வெப்பம், குறைந்த ஈரப்பதம் மற்றும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலேயே மிக வேகமாக வெப்பமயமாகும் நாடாக ஸ்பெயின் உள்ளதாகவும், காலநிலை மாற்றமே இத்தகைய பேரழிவிற்கு முக்கிய காரணம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b