Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 29 ஜூலை (ஹி.ச)
மதுரை அழகர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆடிப்பெருந்திருவிழா இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடனும், கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது.
பதினெண் சித்தர்கள் வழிபட்ட தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றுமான திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவை காண மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் திருநாள் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
தங்க குதிரை வாகனத்தில் வலம் வந்த பெருமாளை தரிசித்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பினர்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
ஆடி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக, ஆடிப் பௌர்ணமியான இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதற்காக பக்தர்கள் பெருந்திரளாக காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b