Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)
த.வெ.க. நிர்வாகி மீது இளம்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவு, மிரட்டல் உள்ளிட்ட புகார்களை அளித்துள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சரையும் விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
த.வெ.க.வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது, கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது பெண் குழந்தையையும் பாலியல் ரீதியாக விமர்சித்ததாகவும் இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் பலமுறை புகார் அளித்தும், இதுவரை விஜய் மோகன் கைது செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல், தமிழக காவல்துறையின் செயல்பாடு மற்றும் அதன் மீது அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு குறித்து கடும் சந்தேகத்தை எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசும் முதலமைச்சர், முதலில் தனது சொந்தக் கட்சிக்குள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு குறித்து வெறும் பேச்சுகள் மட்டும் பயனளிக்காது என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் த.வெ.க. நிர்வாகி விஜய் மோகன் மீது உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளும், கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ