NEET வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் - துரை வைகோ
சென்னை, 29 ஜூலை (ஹி.ச.) பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், குறிப்பாக NEET தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த ம
Durai


Nn


சென்னை, 29 ஜூலை (ஹி.ச.)

பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், குறிப்பாக NEET தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசியது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், நேற்று (28.07.2026) நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அவரது உரையில், NEET உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் வினாத்தாள் கசிவுகள், அதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் சந்தித்து வரும் மனவேதனை, மேலும் கே. ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், பொதுத் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் தொடர் போராட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கரப்பான் பூச்சிகள் என்று கேலி செய்யப்பட்ட போதிலும் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் தலைகுனியாமல் தொடர்ந்து போராடிய ஜென் Z தலைமுறையின் உறுதியையும் பாராட்டியுள்ளார்.

இளைஞர்களின் குரலை யாராலும் நிரந்தரமாக அடக்க முடியாது என்றும், இறுதியில் உண்மையும் ஜனநாயகமும் வெற்றி பெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ