Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 29 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரக் கழிவுகளை கொட்டிய நபருக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ரூ.2,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜோசியர் மணிகண்டன் பரிகார பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.
பரிகாரம் முடிந்த பிறகு அதில் பயன்படுத்தப்பட்ட கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக தகவல் கிடைத்ததையடுத்து, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆற்றில் பரிகாரக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் ஜோசியர் மணிகண்டனிடம் இருந்து ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும், இனி ஆற்றங்கரை பகுதிகளில் பரிகாரங்கள் நடத்தும் நபர்கள், பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஆற்றில் வீசாமல், நகராட்சி நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN