Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் திரண்டு வந்த நிர்வாகிகள், பல்வேறு வாகனங்களில் அணிவகுத்து வந்து தங்கள் எழுச்சியை வெளிப்படுத்தினர்.
கட்சியில் இருந்து சிலர் விலகிச் சென்றாலும், பெரும்பான்மையான நிர்வாகிகளும் தொண்டர்களும் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் உறுதியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் என்றும் நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
கட்சி தலைமைக்கு தங்களது விசுவாசத்தை நேரில் தெரிவிக்கவே இந்த திரளான வருகை என அவர்கள் குறிப்பிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b