Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாநகராட்சி சார்பில் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் நோக்கில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்கள் இன்று (ஜூலை 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளன.
சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களிலும் இந்த சிறப்பு வசூல் முகாம்கள் செயல்படும்.
சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை வரியை எளிதாக செலுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அலுவலகங்களுக்கு நேரில் சென்று வரியை செலுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இன்று முகாம்கள் மாலை 6 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் முகாம்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்படும் என்பதால், சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலுவைத் தொகையை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக வரி செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் நேரில் செலுத்த விரும்புவோருக்கு இந்த முகாம்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரி செலுத்த வருபவர்கள் தங்களது சொத்து வரி ரசீது அல்லது மதிப்பீட்டு எண்ணை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b