Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 03 ஜூலை (ஹி.ச.)
மதுரையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் இன்று காலை மயிலாடுதுறை அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.
மோதிய வேகத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதியும் முற்றிலும் சேதமடைந்தது.
விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், பேருந்துகளில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த 23 பேரில், எலும்பு முறிவு ஏற்பட்ட 6 பேர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகம் அல்லது ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b