Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச)
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 13 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகளையும், 3 பேருக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளையும், ரூ.14.13 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார்.
மேலும், 4 பெண் பயிற்றுநர்கள் மற்றும் 2 ஆண் பயிற்றுநர்கள் என மொத்தம் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வரும் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிந்த நிலையிலுள்ள 13 முன்னாள் வீரர்களுக்கு ரூ.9.36 லட்சம் நிலுவைத் தொகையும், 3 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.4.77 லட்சம் நிலுவைத் தொகையும் வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 58 வயதை எட்டிய பொருளாதாரத்தில் நலிந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 82 முன்னாள் விளையாட்டு வீரர்களும், 13 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ