Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்து மூடியது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, தமிழக அரசுடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வென்றது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் பசுமைத் தாமிர உருக்காலை என்ற பெயரில் மீண்டும் ஆலை தொடங்க அனுமதி கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இவ்வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரி ராகவன் மூலமாக இடைமனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாகக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் மற்றும் க. வசந்தி (பண்டாரம்பட்டி) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் பசுமைத் தாமிரம் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் கால்பதிக்கத் துடிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்தி, அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b