Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 30 ஜூலை (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் இன்று அதிகாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தும், எதிரே வந்த டிராக்டரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆம்னி பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்திய பின்னரே போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b