கல்லூரி மாணவிக்கு தொந்தரவு - 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கல்லூரியின் தாளாளர் கைது
தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செயின்ட் மேரிஸ் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலை
Arrest


தென்காசி, 30 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செயின்ட் மேரிஸ் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்த கல்லூரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு பயின்ற கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கல்லூரியின் தாளாளரான பினு என்பவர் தொடர்ந்து பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த மாணவி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தபோது அவரது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதாக கூறப்படும் நிலையில், அதனை தெரிந்து கொண்ட அந்த கல்லூரியின் தாளாளர் அந்த மாணவியை அழைத்து நீ உன் ஆண் நண்பரிடம் பேசுவதை உன் வீட்டில் சொல்ல வேண்டாம் என்றால் தான் சொல்வதைப் போல் நடக்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், கல்லூரி முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் இதேபோல் கடந்த 2 வருடங்களாக கல்லூரியின் தாளாளரான பினு என்பவர் அந்த மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மன வேதனை அடைந்த அந்த மாணவி அவரது பெற்றோரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவித்த நிலையில், அவரது பெற்றோர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது தென்காசி மகளிர் காவல் நிலைய போலீசார் கல்லூரி தாளாளரான பினு என்பவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் வைத்து தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் கூறிய நிலையில், அவரை தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN