Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஜூலை (ஹி.ச.)
மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்து, தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகள் நலன் மற்றும் மக்கள் நலனில் எந்தவித சமரசமும் செய்யப் போவதில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
அறிக்கையில், மேகதாது அணை விவகாரம் 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல தி.மு.க. தலைமை பேசி வருகிறது. அப்படியானால், இதுவரை தூங்கிக்கொண்டிருந்தது யார் என்பதற்கே தி.மு.க. தலைமையே பதில் அளித்துள்ளது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மக்களால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகும், இன்னும் தாங்களே முதலமைச்சராக இருப்பது போல தி.மு.மு.க. தலைமை பேசி வருவது யதார்த்தத்தை உணராத நிலையை காட்டுகிறது. ஆட்சியில் இருந்தபோது தீவிரமாக செயல்பட்டிருந்தால், இன்று மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தி, பதவி ஆசை மற்றும் பொறாமையால் தி.மு.க. தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, மேகதாது அணை விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் உரிமைகள், விவசாயிகளின் நலன் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விவகாரத்திலும் தமிழக வெற்றிக் கழக அரசு ஒருபோதும் இடமளிக்காது என தமிழக வெற்றிக் கழகம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ